வெள்ளி, ஜூலை 29, 2016

வங்கத்து சீயமும் தங்கத் தமிழ் கவிஞனும்

நானும் 'ஜிங்க்னு போயிட்டு ஜங்க்ன்னு வந்துடலாம்
என்றுதான் போன பதிவுக்கப்புறம் போனேன். 
அப்பிடியே தாமதமாகி விட்டது. 
ஓயாத ஊர்சுற்றல். வெளிநாட்டுப் பயணங்கள்.... 
வெளியூர் பயணங்கள்... லண்டன், ஐரோப்பா சென்று வந்தேன். 
வந்தவுடன் ஐயப்பன் புத்தக வேலை முடித்தேன்.. 
அச்சுக்கு போயிருக்கிறது.. வந்தவுடன் தெரிவிப்பேன். 
ஒரு புத்தக மொழியாக்கம் இப்போது செய்து கொண்டிருக்கிறேன். 
என் சிறுகதை தொகுப்பு வெளியீட்டிற்காக தயார் செய்து கொண்டிருக்கிறேன்.

எதுக்காக இவ்வளவு பீடிகை என்கிறீர்களா? 
வலைக்கு வராது டபாய்த்ததிற்கு சால்ஜாப்பு சொல்லத்தான். 
இனிமே வண்டி ஒழுங்காய் ஓடும்..

துவக்கத்திற்கு முன், முடிந்துபோன இரு சகாப்தங்கள் பற்றிய அஞ்சலி

முடிந்து போனது அந்த ஆளுமைகளின் ஸ்தூல சரீரத்தின் 
நடமாட்டம் மட்டுமே. 
இலக்கிய வானில் என்றும் அந்தத் தாரகைகள் 
ஒளிவீசிக் கொண்டிருக்கும்.

மஹாஸ்வேதா தேவி

இந்திய இலக்கிய உலகில் தவிர்க்கமுடியாத படைப்பாளியாக 
விளங்கிய மகாஸ்வேதாதேவி தனது 90வது வயதில் 
நேற்று காலமானார். 

அவர் வெறும் படைப்பாளி மட்டுமல்ல. ஒரு சமூக சேவகி: 
அரசியல் விமரிசகர்: பிற்பட்டவர்களுக்கும், சமுதாயத்தில் 
ஒடுக்கப்பட்ட மக்களுக்குமாய் இறுதிவரை குரல்கொடுத்த 
புரட்சிக்குயில். இலக்கியவாதிகளைப் பெற்றோராகப் பெற்று, 
ஒரு நாடகாசிரியரை மணந்து, நபரூன் பட்டாச்சார்யா எனும் 
திறமை வாய்ந்த நாவலாசிரியரை மகனாகவும் பெற்றவர். 
வங்கதேசத்தில் பிறந்து, இந்தியப் பிரிவினைக்குப் பின் 
கொல்கத்தா நகரில் குடியேறினார். 
ஒரு பத்திரிகையாசிரியராகவும் நாவலாசிரியையாகவும் 
இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தவர். 
ஒடுக்கப்பட்டவர்கள் சார்பாய் ஓங்கி ஒலித்தது இவர் குரல். 
மலைவாழ் பழங்குடியினர் படும் அல்லல்களும், அவர்களைச் 
சுரண்டும் மேட்டுக்குடியினரின் கொடுமையும்  அவருடைய 
நாவல்களில் இடம்பெற்றபடி இருந்தது . மேற்கு வங்காளத்தில் 
தொழில் வளர்ச்சியைக் காரணம் காட்டி விவசாய நிலங்கள் 
ஆர்ஜிதம் செய்யப்படுவதற்கு கடும் எதிப்பு தெரிவித்தவர். 
விளைவுகளைப் பற்றி அச்சம் இன்றி செயல்பட்டவர் இந்த 
பாரதி கண்ட புதுமைப் பெண். மகாஸ்வேதாதேவி மார்க்கசீய 
சிந்தனைகள் கொண்டவரே ஆன போதிலும், 
மேற்குவங்கத்தில் மா.கம்யூனிஸ்ட் ஆட்சியில் இருந்தபோது, 
நந்திக்ராம் பிரச்னையின் போது அரசை எதிர்த்தவர்.


தனது கணவர் பிஜோன் பட்டாசார்யவுடன் ஏற்பட்ட விவாகரத்தும், 
தன் மகனும் தந்தையோடு போனதும் இந்த உறுதிவாய்ந்த 
பெண்ணரசியை நிலைகுலைய செய்யவில்லை. எழுத்தும், 
சமூக நோக்குமே அவர் வாழ்க்கையாகிப் போனது.

மகாஸ்வேதாதேவியின் ஆக்கங்கள் ஆங்கிலம் ஹிந்தி உட்பட 
பல மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டன. 
பெண்களின் முன்னேற்றத்துக்கும் சமவாய்ப்புகளுக்கும் 
தன்னை முழுமையாய் ஈடுபடுத்திக் கொண்டார்.

பத்மவிபூஷன்(2006), மேகசெசே விருது (1996),சாஹித்திய அகாதமி 
விருது  (1979), ஞானபீட விருது (1995),பத்மஸ்ரீ  (1986) மற்றும் 
பல மாநில விருதுகளும் பட்டங்களும் இவரைத் தேடிவந்தன. 
இவர் படைப்புகளில் ஜான்சி ராணி, அக்னி கர்பா, 
சோட்டி முண்டா ஏவம் தார் திர், பாஷாய் துடு, 
ருடாலி, பெண்களும் நலிந்தவர்களும் விவசாயிகளும், குலபுத்ரா 
ஆகியவை முக்கியமானவை. வங்க இலக்கியத்தில்  வாழ்நாள் சாதனையாளர் பட்டமும் பெற்றார். 
“ஆரண்யேர் அதிகார்” நாவலுக்காக கிடைத்ததே 
சாஹித்ய அகாதமி விருதாகும்.

எண்பதுகளில் கல்கத்தாவில் நான் பணியாற்றியபோது 
வங்க இலக்கிய ஆர்வல நண்பருடன் ஒரு இலக்கிய கூட்டத்திற்கு போயிருந்தேன். 
விழாமுடிந்தவுடன் நண்பருடன் மகாஸ்வேதா தேவி அவர்கள் 
அருகாமையில் சென்றோம். அறிமுகம் செய்விக்கப் பட்டேன். 
தமிழ்நாடு என்றவுடன்... ‘ஜோயகோந்தோன்’ (ஜெயகாந்தன் ) என்று சிரித்தார். 
அந்த சிரிப்பை என் புத்தக அலமாரிகளில் ஒன்றில் 
பத்திரமாய் வைத்திருக்கிறேன்.  

மிக எளிய வாழ்க்கை வாழ்ந்த அவர் மறைவு இலக்கியத்துக்கும் 
ஆதரவற்ற ஏழைச் சமூகத்துக்கும் ஒரு பெரும் இழப்பு.


ஞானக்கூத்தன்

தமிழ்ப் புதுக்கவிதையுலகில் ஒரு முன்னோடியாக இருந்த கவிஞர் 
ஞானக் கூத்தன் மறைவு ஒரு சொந்த சோகம். மிகக்குறைந்த 
சொற்களில், கூற வந்ததை காட்சிப்படுத்த வல்லவை இவர் கவிதைகள். 
இவர் மரபுக்கவிதை இலக்கணம் நன்கு அறிந்திருந்ததாலேயே 
புதுக் கவிதைகளும் உறுத்தாத ஒலிநயம் கொண்டிருந்தன. 
அங்கதம் பேசும் வரிகள்.
           




எனக்கும்
தமிழ் தான் மூச்சு ஆனால்,
அதை பிறர் மேல் விடேன்!

என்ற வரிகள்தான் நான்கு தசாப்தங்களுக்கு முன் என் பிடரியை 
உலுக்கி ஞானக்கூத்தனை திரும்பிப் பார்க்க வைத்தது. 
அவர் கவிதைகள் எளிமை போல் தோன்றும், எள்ளி நகையாடும், 
நம் உள்ளேபோன கவிதை நள்ளிரவில் எழுப்பி வேறோர் அர்த்தம் சொல்லும்.....

அவருடைய மேஜையில் இருந்த நடராஜர் பற்றிய கவிதையும், 
'அம்மாவின் பொய்கள்' போன்ற பல கவிதைகளும் என்றும் 
நினைவில் நிழலாடும். 

'பவழமல்லி' என்ற ஞானக்கூத்தனின் காதல்கவிதையைப் பாருங்கள்: 


கதைகேட்கப் போய்விடுவாள் அம்மா
மாடிக்கொட்டகைக்குப் போய் விடுவார் அப்பா
சன்னத் தாலாட்டின் முதல்வரிக்கே குழந்தைத்தம்பி தூங்கிவிடும்
சிறுபொழுது தாத்தாவுக்கு விசிறியதும் அவரோடு வீடுதூங்கும்

பூக்களெல்லாம் மலர்ந்தோய்ந்த இரவில் – மெல்ல
கட்டவிழும் கொல்லையிலே பவழமல்லி

கதைமுடிந்து தாய்திரும்பும் வேளை மட்டும்
தெருப்படியில் முழுநிலவில்- அந்த நேரத்தனிமையிலே
என் நினைப்புத் தோன்றுமோடி ?

அவருடைய கவிதைத் தொகுப்புக்களான ‘அன்று வேறு கிழமை’, ‘மீண்டும் அவர்கள்’, ‘சூரியனுக்கு பின் பக்கம்’ போன்றவைகளை தேடி வாசியுங்கள். அப்போது புரியும் மரணம் ஏன் கவிஞனை வெல்லவே முடியாதென்று.